தமிழகத்தில் ரயில் பயணிகளின் தேவைகளை உறைப்பாகவும் ஒருங்கிணைந்த குரலாகவும் ரயில்வே நிர்வாகத்திடம் கொண்டு செல்லும் நோக்கில், 37 ரயில் பயணிகள் நலச் சங்கங்கள் ஒன்று இணைந்து தமிழ்நாடு ரயில் பயணிகள் கூட்டமைப்பு (TRUF) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன.
சென்னை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு பயணிகள் நலச் சங்கங்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பின் தலைவராக என். சுப்பிரமணியன் மற்றும் பொதுச்செயலாளராக ஏ. நஜீப் ஈசாக் கனி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
ரயில் சேவை விரிவாக்கம், புதிய ரயில் நிலைய நிறுத்தங்கள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் இணைப்புச் சேவைகள் தொடர்பாகப் பயணிகள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இக்கூட்டமைப்பின் முதன்மை நோக்கமாகும். ரயில்வே நிர்வாகத்துடன் மோதல் போக்கை மேற்கொள்ளாமல், இணக்கமான மற்றும் ஆக்கபூர்வமான கூட்டுப் பங்களிப்பின் மூலம் பயணிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற இக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் பல நகரங்களில் போதுமான ரயில் சேவைகள் இன்மை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புதிய நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் ரயில்களை நீட்டிப்பது தொடர்பான புறக்கணிப்புகள் குறித்தும் கூட்டமைப்பு கவனம் செலுத்தும். மேலும், ரயில்வே தொடர்பான விவகாரங்கள் மட்டுமன்றி சாலை கட்டமைப்பு, மேம்பாலங்கள், பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் மற்றும் இதர நகரக் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளையும் மக்கள் நலன் கருதி இக்கூட்டமைப்பு கையில் எடுக்க முடிவு செய்துள்ளது.














Leave a Reply